சோளியஸ் மென்டிஸ் (1897 – 1975)

1897ம் ஆண்டு யூன் மாதம் 17ம் திகதி ஆயுள்வேத வைத்தியர் ஒருவரின் மகனாக சிலாபம் மாதம்பை நகருக்கு அண்மையில் உள்ள மகாவெவ எனும் கிராமத்தில், கஹவே சோளியஸ் மென்டிஸ் பிறந்தார். நாத்தாண்டிய வீரஹேன வித்யாரத்ன பிரிவெனாவில் சேர்ந்து பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றார். இக்காலப் பகுதியில் மாவில விகாரையில் ஓவியங்கள் வரைந்த தனது உறவினரான மெமோனிஸ் சில்வாவின் நிர்மாணிப்புகளைக் கண்டு மாவில விகாரையில் ஓவியங்கள் வரைய முற்பட்டார். இவ்வாறு மாவில விகாரையில் முதன்முதலாக வரைந்த போதிசத்துவர் உருவம் அவரது விகாரை ஓவியங்களின் ஆரம்பமாக அமைந்தது.

விகாரைச் சுவர் ஓவியங்களை வரைந்த கலைஞர்களின் படைப்புகளைக் கற்றறிந்ததோடு, பலவித படைப்புக்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஓவியக் கலையை வளர்த்துக் கொண்டதால், சுவரோவியங்கள் பற்றிக் கூடுதலான அறிவைப் பெற்றார். இவ்வாறு சுயமாகக் கற்றதால் அவருக்கே உரித்தான பாணியில் ஓவியங்கள் வரையும் திறன் அவரிடம் உருவானது. களனி விகாரை ஓவியங்கள் இதன் உன்னதத் தன்மையை எடுத்துக் காட்டுவனவாக அமைகின்றன.

புதிய களனி விகாரையை உருவாக்கத் துணை புரிந்த ஹேலேனா விஜேவர்தன அவர்கள் அங்கே ஓவியங்களை நிர்மாணிக்க சோளியஸ் மென்டிஸ் அவர்களைத் தெரிவு செய்ததுடன் அவருடைய வேண்டுகோளுக்கிணங்க, பிரபல்யம் வாய்ந்த மேற்கத்தேய கலை மரபையும், கீழைத்தேய கலை மரபையும் கற்றறியவும் சந்தர்ப்பம் வழங்கினார். அதன் விளைவாக புதிய பௌத்த விகாரைச் சித்திரக் கலைப்பாணியை களனி விகாரை ஓவியங்கள் மூலம் அறிமுகப்படுத்த சோளியஸ் மென்டிஸ் அவர்களுக்கு வாய்ப்பு உருவானது.

களனி விகாரையின் சித்திர நிர்மாணிப்புக்காக இந்தியாவின் அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களின் கலை நிர்மாணங்களையும் இலங்கையின் சிகிரியா, திவங்க சிலை மனை போன்ற தொன்மையான ஓவிய நிர்மாணிப்புகளையும் கற்றறிந்தார். இவற்றினால் பெற்ற அறிவின் செல்வாக்கைப் புதிய படைப்புக்களைப் பயன்படுத்த முற்பட்டார்.

பௌத்த விகாரை ஓவியங்கள் புதிய கலைப் பாணியைக் கொண்டமைந்ததுடன் அவரது நிர்மாணிப்பின் கருப்பொருள்களும் புதிய வடிவத்தைக் கொண்டமைந்தன. ஜாதகக் கதை மரபுக்குப் பதிலாக புத்த சாசனத்தின் வரலாற்று நிகழ்வுகளும், இலங்கை புத்த சாசனத்தின் வரலாற்று நிகழ்வுகளும் அடங்குமாறு ஓவியங்கள் வரையப்பட்டன.

புத்தருடைய வாழ்க்கையின் நிகழ்வுகள்

  • மகாமாயா தேவியின் கனவு
  • ஏர் பூட்டு விழா
  • கல்வி பயிலுதல்
  • சுஜாதா தேவியின் உணவுத் தானம்
  • புத்தர் நிலையை அடைதல்
  • புத்தரின் பரிநிர்வானம்
மகா மாயாதேவியின் கனவு
ஏர் பூட்டு விழா
கல்வி பயிலுதல்
சுஜாதா தேவியின் உணவுத்தானம்
புத்தர் நிலையை அடைதல்
புத்தரின் பரிநிர்வானம்

வரலாற்று நிகழ்வுகள்

  • விஜயகுமாரனின் இலங்கை விஜயம், அனுராதபுர பெரும் எல்லை நிர்மாணிப்பு
  • சங்கமித்தை பிக்குணி அவர்கள் வெள்ளரசுக் கிளையை இலங்கைக்கு கொண்டு வருதல்.
  • ஹேமமாலா இளவரசியும் தந்த குமாரனும் புனிதத் தந்தத்தை இலங்கைக்கு கொண்டு வருதல்.
  • புத்தபெருமான் இலங்கையின் மகியங்கனை நாகதீபம், களனி ஆகிய இடங்களில் கால் பதிக்கும் ஓவியம்.
  • இயக்கர்களை கிரித்தீவுக்குத் துரத்துதல்.
  • மாத்தளை அலுவிகாரையில் திரிபிடக நூலுருப்படுத்துதல்.
சங்கமித்தை பிக்குணி அவர்கள் வெள்ளரசுக் கிளையை இலங்கைக்கு கொண்டு வருதல்
ஹேமமாலா இளவரசியும் தந்த குமாரனும் புனிதத் தந்தத்தை இலங்கைக்கு கொண்டு வருதல்.
மாத்தளை அலுவிகாரையில் திரிபிடக நூலுருப்படுத்துதல்.
புத்தபெருமான் இலங்கையின் நாகதீபத்தில் கால் பதித்தல்
புத்தபெருமான் இலங்கையின் மகியங்கனையில் கால் பதித்தல்

களனி விகாரை சுவரோவியங்களில் காணப்படும் சிறப்பியல்புகள்

உருவங்களிலும் வர்ண இரேகைகளிலும் சிறப்பான தன்மை காணப்படுகிறது.

மனித உருவங்களை நிர்மாணித்தல்

லயத்துடன் கூடிய நீண்ட உருவங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. பெரிய இடப்பரப்பின் மீது துடிப்புள்ள உருவங்கள் பல ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை சிறப்பான இயல்பாகும்.

வர்ண உபயோகம்

மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்ட முப்பரிமாணத் தன்மையுடைய உருவங்கள் உள்ளன. இருளான மஞ்சள், கபில நிறம், கறுப்பு, வெள்ளை போன்ற வர்ணங்கள் உபயோகிக்கப் பட்டுள்ளன. நிழலின் ஊடாக ஒளி ஊடுருவித் தெரியும் விதத்தில் கியூரஸ்கியூரோ (Chiaroscuro) கோட்பாட்டுக்கு ஒத்ததாக வர்ணம் தீட்டியுள்ளமையை இவ்வோவியங்களில் காணலாம்.

இரேகைகளை வரைதல்

சித்திரங்களை ஒழுங்கிணைக்கும்போது இரேகைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவர் உபயோகித்துள்ள இரேகைகள் மிக நுணுக்கமான, முறிவில்லாத, கோணாத, அழகான, பாவத்தன்மையுடைய, பலமுடைய நளினத் தன்மையைக் கொண்டவை. இரேகைகள் கையாண்ட விதம் ஆசிய நிர்மாணிப்புகளை ஒத்துள்ளன. விசேடமாக அஜந்தா, சீகிரியா, திவங்க மனை சித்திரங்களின் இரேகைகளை விட, இவற்றின் இரேகைகள் சித்திரத்தின் உருவங்களுக்கும் வெளிப்பரப்புக்கும் இடையிலான தொடர்பை உருவாக்குகின்றன.

களனி ரஜ மகா விகாரையின் ஓவியங்களில் பயன்படுத்தியுள்ள நுட்ப முறைகள்

உலர் சாந்தின் மீது சுவரோவியங்களை வரையும் முறையான பிரெஸ்கோசிக்கோ நுட்ப முறையே இவ்வோவியங்களை வரையவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

களனி விகாரையைத் தவிர ரணஸ்கல்ல விகாரை, கிரியுள்ள மெத்த பொல விகாரை, ஹபராதூவ பிட்டிதூவ களனிகொட விகாரை, பொலநறுவை ஸ்ரீ விஜய விகாரை போன்ற விகாரைகளிலும் சோளியஸ் மென்டிஸ் சித்திரம் வரைந்துள்ளார்.

புத்த பெருமானின் மகியங்கனை வருகை

இச்சுவரோவியம் களனி இராஜமகா விகாரையில் உள்ள புதிய விகாரையில் காணப்படுகின்றது. புத்தர் பெருமான் மகியங்கனைக்கு வருகை தந்து அங்கு இருந்த இயக்கர்களைக் கட்டுப்படுத்தியமை இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. இது பௌத்த இலக்கியத்தில் வரும் ஒரு விவரமாகும். பண்டைய தெற்காசிய பாரம்பரிய பெளத்த ஓவிய மரபு இந்த ஓவியத்தின் மூலம் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பண்டைய தென்னிந்திய பாரம்பரிய சுவரோவியக் கலைக்குரிய ஒரு சிறப்பியல்பான தனி நிறம் பயன்பாடு (imonochrone) இங்கு கையாளப்பட்டுள்ளது. அத்தோடு, இந்த ஓவியங்களில் காணப்படுகின்ற பண்டைய பாரம்பரியத்துடன் நேரடியாக இணைந்த ஒரு பண்பாக வெண்ணிறத்தை ஏதோவொரு வகையில் மிகைப்படுத்திக் காட்டியிருந்தமை குறிப்பிடலாம்.

*இயக்கர்களைக் கட்டுப்படுத்தல்” எனும் ஓவியத்தில் வெண்ணிறத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒளிக்கும் நிழலுக்கும் இடையிலான ஒன்றுக்கொன்று எதிரான தொடர்பும், அதனூடாக சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு காட்டப்பட்டுள்ள வெளிப்பாடும் பெரிதும் வலிமையானவையாகும். அதாவது புத்தர் பெருமான் தீயை உருவாக்குதலும் இருளில் இருந்த இயக்கர்கள் தீயினது ஒளியின் மூலம் கட்புலனாவதும் வெண்ணிறப் பயன்பாட்டில் காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த ஓவியத்தில் உள்ள வெண்ணிறத்தின் மூலம் அதில் உள்ளடங்கியுள்ள வெளிப்பாட்டுத்தன்மை முனைப்புறுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியமான ஒரு தனி வர்ண, நிறந்தீட்டலாக வெண்ணிறம் கையாளப்பட்டுள்ள விதத்தின் மூலம் இந்த ஓவியத்தின் இயக்கத்தன்மையும் உத்வேகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயல்பு பாரம்பரியமான பயிற்சிக்குப் புறம்பாகச் சேர்க்கப்பட்டுள்ள ஓர் ஓவிய உத்தியாகும். அதற்கமைய இந்த ஓவியத்தின் மூலம் ஒரேயடியாக பாரம்பரியமான மற்றும் பாரம்பரியமற்ற ஓவியக்கலைத் தொழினுட்ப உத்திகளிரண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் குறித்த தோற்றப்பாட்டுடன் இணைந்த உயிரோட்டமான தன்மை காட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தின் மூலம் புத்தர் பெருமானின் தத்துவம் தொடர்பான ஒரு கண்ணோட்டம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பாரம்பரியமாக ஒரு தனி வர்ணத்தன்மை மற்றும் உறுதிப்படுத்திக் காட்டும் வகையில் வெண்ணிறத்தின் பயன்பாடு ஆகியன மூலம் இந்தக் கட்புல வெளிபாட்டைக் கட்டியெழுப்பியுள்ளனர்.

இந்த ஓவியத்தின் கலைத்துவ உத்திகள் மூலம் கட்புலனாகும் தன்மை அதுே வடிவத்தில் கட்டியெழுப்பப்பட்டுக் காட்டப்படவில்லை. எனவே இந்த ஓவியத்தின் கலைப்படைப்பு ஒரு வெளிப்பாட்டுக் கலைப்பாணியாகும். இந்த ஓவியத்தில் அடங்கியுள்ள சகல அம்சங்களும் அதற்குச் சான்றாக உள்ளன. பெரிதும் உறுதிப்படுத்திக்காட்டும் லயத் தன்மையே அதுவாகும். மனித உருவங்கள், மரங்கள் உட்பட ஒட்டுமொத்த சூழலும் கற்பனா ரீதியில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

புனித பாதம் பதித்தல்

இந்த ஓவியத்தின் நடுப்பகுதியில் புத்தரும், அதன் முன்னே சமன் தெய்வமும் காட்டப்பட்டுள்ளனர். இதன் பாணியானது தென்னிந்திய பௌத்த ஓவியக் கலைப் பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. பண்டைய தெற்காசிய வலய, மரபுரீதியான ஓவியக் கலையுடன் இணைந்த கண்களைக் கவரும் இயற்கைத்தன்மையை மீறிச் சென்று சந்தத்துக்கும் இசைவாக உருவங்கள் முன்வைக்கப் பட்டுள்ளமை இந்த ஓவியத்தின் பிரதான கலைத்துவப் பிரயோகமாகும். மேலும் வெள்ளைநிறத்தின் மூலம் தனி வர்ணத்தின் இயைபடைந்த இணக்கப்பாடு குலைக்கப்பட்டுள்ளது. அது ஓவியத்திற்கு உயிரோட்டமான தன்மை, இயக்கத்தன்மை, புதுமைப்பாடு ஆகிய பண்புகளை வழங்கியுள்ளது. புத்தர் பெருமானும் பௌத்த மனிதர்களும் மிக அடக்கமான வரையில்காட்டப்பட்டுள்ளனர். எனினும் தெய்வம் மிகச் துடிப்புடனும் செயலூக்கத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதற்காக வெள்ளை நிறத்தையும் உடல்நிலைகளைக் காட்டும் விதத்திலும் கலைஞர் சோளியஸ் மென்டிஸ் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

பௌத்த இலக்கியத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள மூன்று உலகங்களும் இரண்டு உலகங்கள் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையிலான தொடர்பு புத்தர் பெருமாமனினாலும் சமன் தெய்வத்தினாலும் காட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த ஓவியம் மோடிப் படுத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு விதமாகச் கூறுவதாயின், மென்டிஸ் உடல்நிலைமைய மீண்டும் மீண்டும் காட்டுதல், ஒவ்வோர் உருவத்துக்குரிய சிறப்பியல்பான சந்தம் ஆகியன காணப்படுகின்றன. இப்பண்புகளை பாணி சார்ந்த மரபில் காணப்படும் பொதுவான இயல்புகளாகும். எனினும் எடுத்த எடுப்பில் கண்ணைக் கவரும் இயற்பண்புவாத பாங்குபற்றிய உணர்வு ஏற்பட்ட போதிலும் மேற்குறிப்பிட்ட கலைத்துவ உத்திகள் காரணமாக அது அற்றுப் போகின்றது. எனினும் இந்தப் பாணியில் மரபு நிலையிலிருந்து விலகி, விஞ்சிச்சென்ற தனியாள் சார்ந்த கலைத்துவக் குறியீடுகளைக் காணமுடிகின்றது. எனவே இதனை ஒரு நவீன பௌத்த விகாரை ஓவியமாகக் குறிப்பிடலாம்.

error: Content is protected !!