டேவிட் பெயின்டர் (1900 – 1975)

கிறித்தவ ஓவியக் கலையை ஒரு புதிய பாதையில் செலுத்தியவரான டேவிட் பெயின்டர் இலங்கைக் கலைச் சங்கத்தைச் சேர்ந்த ஒரு கலைஞராவார். இவர் ஒரு தலைசிறந்த ஓவியராகப் போற்றப்படுகின்றார். 1900 ஆம் ஆண்டில் இந்தியாவில் அல்மோரா எனும் பிரதேசத்தில் ஆங்கிலேய மிஷனரியைச் சேர்ந்த தந்தைக்கும் சிங்களத் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பின்னர் இலங்கைக்கு வந்து கண்டி திரித்துவக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். மேலதிகக் கல்விக்காக 19 ஆம் வயதில் இங்கிலாந்தில் றோயல் அக்கடமியில் இணைந்தார். அங்கு சித்திரக் கலை தொடர்பான நியமமான கோட்பாடுகளையும் கொள்கைகளையும் பயின்றார்.

ஐரோப்பிய அக்கடமிக் ஓவியக் கலையின் அடிப்படை இயல்புகளைக் கற்ற அவர், அதன் செயற்பாடுகளுடன் தமக்கே உரித்தான ஓர் ஓவியப்பாணியை உருவாக்கிக் கொண்டார். பின்னர் இத்தாலிக்குச் சென்று ஓவியக்கலைத் துறையில் அவர் பெற்ற மேலதிக கல்வியே அவரது ஓவியப் பாணிக்கு அடிப்படையாக அமைந்தது. குறிப்பாக, மறுமலர்ச்சி கால ஓவியக்கலைப் பண்புகளும், கீழைத்தேய மரபுகளும் அவரது படைப்பாக்கப் பாணி மீது பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

டேவிட் பெயின்டர் ஒரு தலைசிறந்த மெய்யுரு ஓவியக் கலைஞர் ஆவார். அவரது சகல படைப்புக்களிலும் காணப்படும் பொதுப்பண்புகளாக தூய்மை, சமனிலை, செம்மை ஆகிய வற்றைக் குறிப்பிடலாம். இயற்கை தொடர்பாக அவரது விருப்பையும் ஆர்வத்தையும் அவர் வரைந்துள்ள நிலத்தோற்ற ஓவியங்களில் தெளிவாகக் காணலாம். மேலும் மனித உருவங்களை வரைவதற்காக மாதிரிகளைப் (Model) பயன்படுத்துவதும் அவரது சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். அது பைபிள் கதைகளை வரையும்போது மறுமலர்ச்சிக் காலக் கலைஞர்கள் கையாண்ட ஓர் உத்தியாகும்.

டேவிட் பெயின்டர் தமது படைப்பாக்கங்களுக்காகக் கொண்ட சில கருப்பொருள்களை, அவரது ஓவியங்களின் ஊடாக இனங்கண்டு கொள்ளலாம். அவ்வாறான சில கருப்பொருள்கள் வருமாறு:

  • மெய்யுரு ஓவியங்கள் (Portraits) – கிராமப்புற மக்கள்
  • நிலத்தோற்றங்கள்
  • மனித உருவங்கள்
  • பைபிள் கதைகள்
மீனவர்
தாயும் பிள்ளைகளும்
கதிரறுப்போர்
சிறுவன்
மீனவர்
மாட்டுவண்டிக்காரர்
மெய்யுரு
The Chapel of the Transfiguration S. Thomas’ College, Mount Lavinia

டேவிட் பேன்டர் ஓவியக் கலைஞரின் படைப்பாக்கப் பாணியும் ஓவிய அடிப்படைகளைக் கையாள்வதில் அவர் வெளிப்படுத்திய பண்புகளும்

உருவப் பயன்பாடு

உயிரோட்டமான தன்மையையும் உயிரின் அழகையும் சிறப்பாக வெளிக்காட்டும் வகையில் மனித உருவங்களைச் சித்திரித்தல், அவ்வுருவங்களின் உடல்நிலைகளை உணர்வு வெளிப்பாட்டுடனும் மென்மையானதாகவும் காட்டுதல் ஆகியன அவரது ஓவியங்களில் காணப்படும் சிறப்பியல்பாகும்.

வர்ணப் பயன்பாடு

ஓவியங்களில் உருவங்களின் முப்பரிமாண இயல்பைக் காட்டுவதற்காக வர்ணங்களைக் கையாண்டுள்ள விதம் சிறப்பானது. அவ்வுருவங்கள் மூலம் தூரநோக்கு இயல்புகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. மேலும் வர்ணந் தீட்டுவதற்காக பிரகாசமான வர்ணங்களை அவர் பயன்படுத்தியுள்ளார். அது ஒரு மனப்பதிவுவாத ஓவியக் கலைப் பண்பாகும் என விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தளப் பயன்பாடு

கலா நிலைய ஓவியக் கலைக் கோட்பாடுகளின்படி தளத்தின் மீது உருவங்கள் வரையப் பட்டுள்ளன. அதற்கமைய ஆக்கத் தளத்தின் மீது உருவங்களை இடப்படுத்தும்போது முன்னணி, இடையணி, பின்னணி என்றவாறாக வெவ்வேறான தளங்களில் உருவங்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. வெவ்வேறு தளங்களில் உருவங்கள் வரையப்பட்டுள்ளமையால், பிரதான பாத்திரங்கள் தளத்தில் மத்தியில் இடப்பட்டுள்ளன. மேலும் கிறிஸ்தவக் கருப்பொருள்களை வரையும்போது ஐரோப்பியப் பண்பாடு மட்டும் தளப்பயன்பாட்டுக்குப் பதிலாக இலங்கைச் சூழலைப் பயன்படுத்திக் காட்டியிருப்பதையும் இவரது ஓவியங்களில் காணலாம்.

வெற்றிகரமாக ஜெரூசலத்தில் பிரவேசித்தல்

தேசிய கலாபவனத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியம், கன்வசு மீது தைல வர்ணத்தினால் வரையப்படுகின்றது. ஐரோப்பியக் அக்கடமிக் ஓவியக் கலைப்பண்புகளின் செல்வாக்கைப் பெற்றுள்ள இப்படைப்பின் கருப்பொருள் கிறிஸ்தவ சமயம் சார்ந்ததாகும்.

ஓவியத்தில் மனித உருவங்கள் வெவ்வேறு உடல்நிலைகளில் வரையப்பட்டுள்ளன. அவ்வுருவங்கள் நளினமானவை. அவ்வுருவங்களில் உடலின் அழகு சிறப்பாகச் சித்திரிக் கப்பட்டுள்ளமையும் உணர்வு வெளிப்பாட்டுத்தன்மையும் இந்த ஓவியத்தின் சிறப்பியல்புகளாகும். ஐரோப்பிய அக்கடமிக் ஓவியக் கலைக் கோட்பாடுகளின் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த முன்னணி, இடையணி, பின்னணி ஆகிய மூன்று தளங்களில் ஓவியம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆக்கத்தின் ஆழம், தூரநோக்கு ஆகிய பண்புகள் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் வெளியின் மீது உருவங்கள் நடுப்பகுதியில் இடப்படுத்தப்பட்டுள்ளன. பிரதான பாத்திரமாகிய யேசு மத்தியிலும் ஏனைய பாத்திரங்கள் இரண்டு புறங்களிலும் காட்டப்பட்டுள்ளன. கிறிஸ்தவக் கருப்பொருளொன்றினால் குறிக்கும் இந்த ஓவியத்தில் ஐரோப்பிய தன்மை கொண்ட மனித உருவங்களுக்குப் பதிலாக இலங்கை (ஆசிய) மனித உருவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் ஒரு சிறப்பியல்பாகும்.

வர்ணங்கள் மற்றும் கோடுகளின் பயன்பாடு

முப்பரிமாண இயல்புகளைக் காட்டும் வகையில் பெரிதும் இளஞ்சிவப்பு நிறம் சார்ந்த பிரகாசமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ஐரோப்பிய அக்கடமிக் சித்திரக் கலையின் கலப்பு வர்ணத்தை விட முற்றிலும் வேறுபட்ட வர்ணப் பயன்பாடாகும். இது டேவிட் பெயின்டரின் கலைப் படைப்புக்களில் காணப்படும் ஒரு சிறப்பியல்பாகும்.

நல்ல சமாரியன் (Good Samarian)

இந்த ஓவியம் கண்டி திரித்துவ தேவாலயத்தில் உள்ளது. யேசு போதித்த ஓர் உவமைக் கதையில் ஒரு காட்சியே இந்த ஓவியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதாவது தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த ஒருவருக்கு நல்ல சமாரியன் உதவி புரிவதையே அது காட்டுகின்றது.

தளத்தின் மீது உருவப் பயன்பாடு தளத்தின் மீது உருவங்களைத் தாபிக்கும்போது முன்னணி, இடையணி, பின்னணி என வெவ்வேறு தளங்களில் அவை கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அதன் மூலம் ஓவியத்தின் ஆழமும் தூரநோக்கும் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பிரதான பாத்திரங்களான நல்ல சமாரியனும் காயமடைந்தவரும் தளத்தில் முன்னணியில் காட்டப்பட்டுள்ளனர். நிலத்தோற்றமும் ஏனைய பாத்திரங்களும் கூடத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. யேசுவின் கதையைக் கூறும் கண்டி திரித்துவத் தேவாலயச் சுவரோவியங்களில் ஐரோப்பிய நிலவுருவத்துக்குப் பதிலாக இலங்கைச் சமூகப் பின்னணி காட்டப்பட்டிருப்பதும் ஒரு சிறப்பியல்பாகும்.

இலங்கை மனிதரின் உருவங்களும் சூழலின் தன்மைகளும் இங்கு தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. ஐரோப்பிய அக்கடமிக் சித்திரக் கலையின் கோட்பாடுகளான, ஆழத்தைக் காட்டும் தூரதரிசனப் பண்புகளையும் முப்பரிமாணத் தன்மையையும் இந்த ஓவியத்தில் காணலாம்.

கண்டி திரித்துவ தேவாலயத்தில் உள்ள ஏனைய ஓவியங்கள்

சிலுவையில் யேசு
சீடரின் பாதங்களைக் கழுவுதல்
error: Content is protected !!