தெதிகமை யானை விளக்கு

கேகாலை மாவட்ட தெதிகமை, சூத்தியகரை தெதிகமை கொட்டவிகாரையில் கண்டுபிடிக்கப் பட்டட இந்த யானை விளக்கு, மகாபாராக்கிரமபாகு காலத்தை அதாவது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. மகா பராக்கிரமபாகு மன்னன், தெத்கமையில் கட்டுவித்த கொட்ட வெகரைத் தாதுகோபத்தில் வெவ்வேறு காலப்பகுதிகளைச் சேர்ந்த இடிபாடுகளுள், பராக்கிரமபாகு மன்னனின் காலத்தைச் சேர்ந்த அத்திவாரத்தைக் கொண்ட ஒரு தாதுகோபத்தின் கர்ப்பக்கிரகத்தில் இந்த விளக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1947 இல் தொல்பொருள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இந்த அகழ்வுகளின்போது தாதுகர்ப்பகத்தில் இருந்து இரண்டு விளக்குகள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்றில் நீர் நிலையியல் உத்தி மூலம் கட்டுப்படுத்தப்படும் எண்ணெய்த்தொட்டி அடங்கியிருப்பதன் விளைவாக அது தனிச்சிறப்புப் பெறுகின்றது. மற்றைய விளக்கில் அவ்வாறாக நீர்நிலையியல் உத்தி மூலம் கட்டுப் படுத்தப்படும் எண்ணெய்த் தொட்டி கிடையாது. அவ்விளக்கு தெதிகமை தொல்பொருளியல் அரும்பொருட்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தேசிய அரும்பொருட்காட்சிச்சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள எண்ணெய்த் தொட்டியைக் கொண்ட விளக்கு, பொள்ளான மற்றும் முழுத் திண்ம வார்ப்புப் பகுதிகளைச் சேர்த்து ஆக்கப்பட்டுள்ளது. இது இலங்கைக் கலைப்படைப்புக்களுள் முக்கியமான ஓர் ஆக்கமாகும். இவ்வாறான தன்மையைக் கொண்ட விளக்குகள் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றில் ஒன்றிலேனும் தனிச்சிறப்பான இந்த உத்தி காணப்படுவதில்லை. இவ்விளக்கு, யானை, வெற்றிலைச் செப்பு, சங்கிலி ஆகிய பகுதிகளைக்கொண்டுள்ளது. யானை உடல் விளக்கின் பிரதான பகுதியாகிய எண்ணெய்த் தொட்டியாக அமைக்கப்பட்டுள்ளது. 12.6 சென்ரி மீற்றர் உயரமும் 6.1 சென்ரி மீற்றர் அகலமும் கொண்ட யானை உடலினுள் உள்ள எண்ணெய், இலிங்கத்தின் வழியே விளக்கை அடையும். அவ்வெண்ணெய் விழும் பகுதி, 23 சென்ரிமீற்றர் விட்டமுள்ள ஓர வெற்றிலைச் செப்பாகும். யானை அவ்வெற்றிலைச்செப்பிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. யானை அதன் தும்பிக்கையினால் ஒரு கரும்பைத் தாங்கியுள்ளது. யானை முதுகின் மீது ஒருவர் ஒருவராக அமர்ந்து கையில் அங்குசமேந்திய யானைப் பாகர்கள் இருவர் உள்ளனர். அவர்களைச்சூழ அழகிய மகாதோரணமொன்று உள்ளது. விளக்கைத் தொங்கவிடுவதற்காக ஆக்கப்பட்டுள்ள சங்கிலி, மகாதோரணத்தின் உச்சியில் தொடக்கப்பட்டுள்ளது. அச்சங்கிலியில் மூன்று இடங்களில் மனித உருவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது 24 சென்ரி மீற்றர் இடைவெளிகளின் பின்னர் 6 சென்ரிமீற்றர் உயரமான ஒரு நடனக்காரர், மேளக்காரர், கைத்தாளக்காரர் ஆகிய உருவங்களே அவையாகும். சங்கிலியில் இறுதியில் பெரிய நாகபடத்தைக் கொண்ட நாக பாம்பு உருவமொன்றினை உள்ளடக்கி விளக்கத்தைத் தொங்கவிடத்தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளது.

வளியமுக்கத்தின் மூலம் செயற்படத்தக்கதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்கின் பிரதான பகுதியாகிய எண்ணெய்த் தொட்டி, யானை உடல் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. யானையின் உடலினுள் இருக்கும் எண்ணெய் இலிங்கத்தின் ஊடாக விளக்கை வந்தடையும். யானையினது காலின் வழியே எண்ணெய் மேல்நோக்கிச் சென்று, வெளிப்புற வளியமுக்கமும் உட்புற வளியமுக்கமும் செய்யப்படுத்தப்படும். அப்போது எண்ணெய் வெளியேறல் நின்றுவிடும். விளக்கைக் கொளுத்திய பின்னர் எண்ணெய் மட்டம் குறைவடைவதால் மீண்டும் வளியமுக்கம் வேறுபடும். அப்போது அவ்விடத்திலிருந்து கீழே நோக்கி எண்ணெய் வழியும். அவ்விடத்தில் எண்ணெய் மீண்டும் மேல்நோக்கிச் செல்வதால் வளியமுக்கமம் சமப்படுத்தப்படும். பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இலங்கையில் கட்டடக்கலை மற்றும் எந்திரவியல் நுட்பமேம்பாட்டையும் அவற்றின் கலைத்துவ வெளிப்பாட்டையும் இக்கலைப்படைப்பு காட்டி நிற்கின்றது.

error: Content is protected !!